தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்..!!

தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் இன்று (18.08.2023) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உட்பட 3 நாட்களிலும் விண்ணப்ப பதிவு நடைபெறும்.

சென்னையை பொருத்தவரை, மாநகராட்சியில் உள்ள 1,428 நியாயவிலை கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 5.30 மணி வரையும் நடைபெறும்.

இதர பகுதிகளில் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு அந்தந்த நியாயவிலை கடைகளில் வெளியிடப்பட்டுள்ளது. நியாயவிலை கடை பணியாளர்களிடம் பொதுமக்கள் இது பற்றி கேட்டறிந்தும், குறிப்பிட்டுள்ள இடத்துக்கு சென்று விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

சிறப்பு முகாமில் விண்ணப்ப பதிவுக்கு செல்வோர், சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய் சான்றிதழ், சொத்து விவரங்களை எடுத்து வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.